செங்குன்றம் அருகே சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டுமுன்னாள் பாமக எம்எல்ஏ போராட்டம். மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு நள்ளிரவில் சுங்ககட்டணம் கேட்டு அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம்.
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஞாயிறன்று பூம்புகாரில் மகளிர் மாநாடு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் அக்கட்சியினர் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநாட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவில் திரும்பிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டதாகவும், வாகனத்திலிருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி மாநாடுகளுக்கும் வாகனங்கள் கட்டணமின்றி இயக்கப்பட்டு வரும் நிலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் வந்த வாகனங்களை அனுமதிக்காமல் ஊழியர்கள் அலைக்கழித்ததாக புகார் தெரிவித்தனர்.
மேலும் நள்ளிரவில் பெண்களை அலைக்கழித்த சுங்கச்சாவடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment