கும்மிடிப்பூண்டி,ஜூலை.7:
உலக திருக்குறள் சமுதாய மையம் மற்றும் டி.ஜெ. எஸ் கல்வி குழுமம் இணைந்து கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழும அரங்கில் முப்பெரும் உலக சாதனை மாநாட்டினை நடத்தினர்.
டிஜெஎஸ் கல்வி குழும அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ-வுமான டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்விற்கு டிஜெஎஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ. ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜெ. தேசமுத்து, இயக்குனர் டி.ஜெ.எஸ் தமிழரசன் நிர்வாக அலுவலர் ஏழுமலை, டிஜெஎஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பிரகாஷ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் லட்சுமிபதி, டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், டிஜெஎஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் கஸ்பார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் உலக திருக்குறள் சமுதாய மையத்தின் நிறுவனர் முனைவர் ம.சக்கரவர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வை ஒட்டி 60 மாணவர்களின் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தொல்காப்பியர் திருவுருவ படம், திருவள்ளுவர் திருவுருவப்படம், கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து 1330 திருக்குறள் அடங்கிய பதாகைகளும் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருக்குறள் மாநில நூல் பகுதி-1, திருக்குறள் மாநில நூல் பகுதி-2, திருக்குறள் கவிதைகள் ஆகிய மூன்று புத்தகங்களையும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஓளவை அருள் நடராஜன் வெளியிட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.
இந்த நூல்களுக்கான தொகுப்புரையை உலக திருக்குறள் சமுதாய மைய தலைவர் கவி மாமணி குமரி செழியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தொல்காப்பியம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. பின் திருக்குறள் மாநில நூல் குறித்த கருத்த ரங்கும் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜனுக்கு திருக்குறள் கல்வி கொடையாளர் என்ற விருதும், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஔவை அருள் நடராஜனுக்கு திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் என்கின்ற விருதும், தமிழ் வளர்ச்சித் துறையை சார்ந்த கு.பிரதாப்பிற்கு திருக்குறள் நெறி பரப்பும் மாமணி என்கின்ற விருது உலக திருக்குறள் சமுதாய மையத்தால் வழங்கப்பட்டது.
இந்த மாநாடானது புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்திந்திய உலக சாதனை நிறுவனத்தாலும், பெங்களூரை சேர்ந்த யுனைட்டி யுனிவர்ஸ் உலக சாதனை நிறுவனத்தாலும், செவெ உலக சாதனை நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை உலக சாதனை கண்காணிப்பு குழு நிர்வாகிகள் வெங்கடேசன், சியாமளா சந்திப் ஆகியோரால் உலக திருக்குறள் சமுதாய மையத்திற்கும், டிஜெஎஸ் கல்வி குழுமத்திற்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பேசுகையில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் தனிப் பெருமையையும் தனி கவனத்தையும் திமுக அரசு தொடர்ந்து செய்து வருகின்றது என்றவர், திருக்குறள் முற்றொரு மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு தொகை, சென்னை மயிலாப்பூரில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை, திருவள்ளூர் சிலைக்கு செல்ல தனிப்பாதையை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழக தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் நடராஜன், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலையினடியில் உலக திருக்குறள் சமுதாய மையத்தை சார்ந்த 265 மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் நிகழ்வை நடத்தி தமிழுக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்த்தனர் என்றவர், திருக்குறளை வாழ்வியலில் கடைபிடிப்பவர்களுக்கு வாழ்க்கை என்றும் ஏற்றத்தை மட்டுமே தரும் என்றும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருக்குறள் வாரம் என்கின்ற நிகழ்வை கொண்டாட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியவர் இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பேச்சுப்போட்டி கவிதைப் போட்டி இசைப்போட்டி ஆகியவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவில் உலக திருக்குறள் ஆய்வு அறிஞர் மையத் தலைவர் செ.மாதன், உலக திருக்குறள் மாநில மைய தலைவர் பாப்பாத்தி சுப்பிரமணியம், உலக திருக்குறள் மைய துணைத் தலைவர் ஆ.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் பிரான்சிஸ்


Comments
Post a Comment