வளசரவாக்கத்தில் ஸ்ரீலட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.3 கோடியில் புதிய ராஜகோபுரம் திருப்பணி... நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை வளசரவாக்கம் காமகோடி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி விநாயகர் மற்றும் கார்ய சித்தி ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் புதிய வடிவமைப்பில் சீரமைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ரூ.3 கோடி மதிப்பில் நூதன ராஜகோபுரம் மற்றும் கோயில் கட்டுமான பணிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜெ.பாலமுருகன் தலைமை தாங்கினார். கோயில் நிர்வாக அதிகாரி எம்.ஜெயராமன், பக்த ஜன சபை தலைவர் கே. ஜெயராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்தானம், அர்த்தநாரி, சம்பத் குமார், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாகாலந்து ஆளுநர் இல. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
ஆலயம் தொழுவது சாலமும் நன்று. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்ப இன்றும் நாடு முழுவதும் கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள இந்த கோவிலில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டேன். விரைவில் இந்த கோயில் கும்பாபிஷேகம் விழாவிலும் கலந்து கொள்வேன் என்றார் அவர்.
இதில் கோயில் அர்ச்சகர்கள் கீர்த்திவாசன், குருமூர்த்தி, சுரேஷ் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வளசரவாக்கம் காமகோடி நகர் பகுதி பொதுமக்கள், பக்தர்கள், கோயில் பணியாளர்கள், பக்த ஜன சபை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வினோத்

Comments
Post a Comment