தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி
ஆர்.இ.சி.லிமிடெட் மற்றும் ALIMCO (இந்திய காப்புக் கை கால் உற்பத்தி கழகம்) இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
முகாமில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, ரூபாய் 35,77,717 மதிப்பீட்டில் 186 மாற்றுத்திறனாளிகளுக்கு 385 உதவி உபகரணங்கள் (ஜாய்ஸ்டிக் மூலம் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், மடக்கக்கூடிய சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், பிளாஸ்டிக் காலிபர்ஸ்) உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி: ஒன்றிய அரசு எந்தப் பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்கத் தயாராக இல்லை; அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர் என்று கூறினார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, ஆர்.இ.சி.லிமிடெட் நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர் நாராயணன் திருப்பதி, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத் தலைவர் கே.பி.பிரம்மநாயகம்,ஆர்.இ.சி.லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளர் தாரா ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அ ரவி

Comments
Post a Comment