பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் முறைகேட்டை விசாரணை செய்ய, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தஞ்சாவூர், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்,கழிவறை கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளில் அரசு அலுவலர்கள் கூட்டு சேர்ந்து சதி செய்து அரசு பணத்தை மோசடி செய்தது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டம் நடத்தி பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முறைகேடுகளை விசாரிக்க தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டப்பட்டது.அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவினை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்றும், வீடு மற்றும் கழிவறை கட்டாமல் பணம் பெறப்பட்டது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் பேரில் விஜிலென்ஸ்-ல் புகார் அளிக்கப்பட்டு,வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆறு ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டது . தொடர்ந்து முயற்சித்து தற்போது விஜிலென்ஸ் அலுவலகத்தில் சென்று கேட்டபோது வழக்கு முடிக்கப்பட்டது என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டதாகவும், அறிக்கையின் மீது ஆடிட்டர் விசாரணை நடத்துவதாகவும் விஜிலென்ஸ் டி எஸ் பி தெரிவித்தார். இதன் மீது ஆடிட்டரிடம் நேரடியாக சென்று கேட்டபோது இந்த முறைகேடு வழக்கு வழிகாட்டுதலில், கழிவறை முறைகேட்டிற்கு மட்டும் என்னிடம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், வீடு கட்டுவதில் உள்ள முறையீடு தொடர்பாக தனக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார் .அதன் பின் விஜிலன்ஸ் அலுவலகத்தில் வீடு கட்டும் முறைகேடு சம்பந்தமாக நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்று கேட்ட போது , சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகிறது. பூதலூர் ஒன்றியம் வெண்டையம் பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாக உயர் நீதிமன்ற வழிகாட்டுதல், மாவட்ட ஆட்சியர் ஆய்வு குழு, அதன் அடிப்படையில் விசாரணை, விசாரணை முடிவில் முறைகேடு நடந்துள்ளது உண்மை என தெரிய வந்த பிறகும் விஜிலென்ஸ் அலுவலகம் முறைகேட்டிற்கு காரணமான அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் து.ரெகுநாதன், பொறியாளர் ஜி.ரமேஷ், பணி மேற்பார்வையாளர் ஜி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் வி.குமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றும் நோக்கில் இந்த முறைகேட்டின் வழக்கை அலைக்கழிக்க வைப்பது சந்தேகத்தை தருகிறது. ஆதலால் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள முறைகேட்டினை விசாரித்து காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,சிபிசிஐடி பிரிவுக்கு இந்த வழக்கினை மாற்ற தமிழ்நாடு அரசையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment