சத்தியமங்கலத்தில் திட்டம் தீட்டப்பட்ட கோவை கார் குண்டு வெடிப்பு..! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட என்ஐஏ..!
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கார் குண்டு வெடிப்புக்கான பின்னணியை வெளியிட்டுள்ளது.கோவை கார் குண்டு வெடிப்பு
கோவை, உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்ட, போத்தனூர் திருமலை நகர், மதீனா அவென்யூ பகுதியை சேர்ந்த தாஹா நசீர் என்பவர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று 3வது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அசாருதீன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவே கோயம்புத்தூரில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 2022 அக்டோபர் 23 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜமேஷா முபீன் உயிரிழந்ததாகவும், ஐஎஸ் ஆதரவாளரான முகமது அசாருதீன் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் திட்டம்
மேலும், தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில், 14 ஆவது குற்றவாளியான தாஹா நசீர், ஜமேஷா முபீன் மற்றும் உமர் பாரூக்கின் நெருங்கிய கூட்டாளி என்பதும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஜலக்குமடவு என்ற பகுதியில் ஆட்களை ஒன்று திரட்டி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொடியை நட்டு, அதை தங்கள் மாகாணமாக அறிவித்துடன், உமர் பாரூக் காட்டில் பலருக்கு பயிற்சி அளித்ததாகவும் குற்றபத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முகமது தௌஃபீக், தாஹா நசீர் ஆகியோர் ஜமேஷா முபீனின் வீட்டிற்குச் சென்றதாகவும், அவர்கள் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கோவை கார் குண்டு வெடிப்பு நடந்தது எப்போது?
கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார். தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Comments
Post a Comment