நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணிக்கம் பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடத்தினை
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் .எ.கே.பி.சின்ராஜ் , திருசெங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டடமானது 5835 ச.மீட்டரில் தரைத்தளத்துடன் கூடிய 5 தளங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்படவுள்ளது.
இக்கூடுதல் கட்டடத்தில் பொது மருத்துவம் புறநோயாளிகளின் பிரிவு, பொது அறுவை சிகிச்சை புறநோயாளிகளின் பிரிவு, எலும்பியல் புறநோயாளிகளின் பிரிவு, ஈசிஜி, எக்ஸ்ரே, பிசியோதெரபி, இயற்கை மருத்துவம், தோல் புறநோயாளிகளின் பிரிவு, பல் புறநோயாளிகளின் பிரிவு, குழந்தைகளுக்கான புறநோயாளிகளின் பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, ஆப்தல் வார்டு, மகப்பேறு வார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற வசதிகள் கொண்டுவரப்படவுள்ளது.
மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடம்337.10 ச.மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாணவியர் விடுதியில் 8 தங்கும் அறைகள் உள்ளன. மேலும் பொது கழிவறைகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.53.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டட பணிகளும், பரமத்திவேலூரில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு நேரில் வருகை புரிந்து திறந்து வைக்க உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 06.06.2023 அன்று தமிழ்நாட்டில் 500 நகர்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்கள். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு 7 நகர்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு ஸ்டாலின் கடந்த 27.06.2023 அன்று இதயம் காப்போம் என்ற திட்டத்தினை கோயமுத்தூர் மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டியில் தொடங்கி வைத்துள்ளார்கள்
இந்த இதயம் காப்போம் திட்டமானது ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் இருக்கும் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 8,000 த்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களிலும், 2686 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்றையதினம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாக்க சிறுநீரக செயலிழப்பு பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 மாவட்ட மருத்துவமனைகள் இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் புதியதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 6 செவிலியர் பயிற்சிப்பள்ளி மட்டுமே இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புதியதாக 11 செவிலியர் பயிற்சிப்பள்ளி கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார்
இது போன்று தினந்தோறும் மக்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இணை இயக்குநர்கள் மரு.விஜயலட்சுமி (சுகாதாரம்), மரு.ராஜ்மோகன் (மருத்துவம்), நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர்கள் மரு.பூங்கொடி (சுகாதாரப்பணிகள்), மரு.வாசுதேவன் (காசநோய்), நகர்மன்ற தலைவர்கள் (திருச்செங்கோடு) .நளினி சுரேஷ் பாபு, (பள்ளிபாளையம்) செல்வராஜ், (கொமாரபாளையம்) .விஜய் கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் (திருச்செங்கோடு).த.கார்த்திகேயன், மருத்துவ அலுவலர் மரு.மு.மோகன பானு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் த. .அருள், உதவி பொறியாளர் ஏஞ்சலினா ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் முத்தையா

Comments
Post a Comment