கொடுங்கையூரை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 42) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 24 தேதி பணியை முடித்துவிட்டு செங்குன்றத்திலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புழல் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை நாகாத்தம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது சுமார் 11 மணியளவில் ஆணும் பெண்ணும் இவரை வழிமறித்து கத்தியை காட்டி இவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
பின்னர் அவர்களை போலீசார் துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் புழல் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 22) என்பவர் தனது கள்ளக்காதலி கண்ணகிநகரை சேர்ந்த வாணி (வயது 19) என்பவருடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் பொங்கல் பண்டிகை செலவிற்கும் பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் இவர்கள் இருவரின் மீது வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்து, இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment