ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலை, கதிர்வேடு சாலை சந்திப்பு அருகே தேவராஜ், விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அசன்பாட்சா (வயது 40) என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கடையை வாடகைக்கு விட்டுள்ளார்.
இவ்விடத்தில் அசன்பாட்சா சுமார் 4 வருடங்களுக்கு மேலாக பஞ்சு மெத்தை கடை வைத்து நடத்தி வருகிறார். உரிமையாளரான கணவன், மனைவி தேவராஜ் ,விஜயலட்சுமி அருகிலேயே தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் பஞ்சு மெத்தை கடையில் இருந்து வென்புகை வருவதை கண்ட பொதுமக்கள், இதுபற்றி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவல் நிலைய போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை அலுவலர் பர்குனண் மற்றும் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் களத்தில் இறங்கினார்கள்.
ஆனாலும் பஞ்சு பொருட்களின் மீது பரவிய தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிய தொடங்கியதை தொடர்ந்து அம்பத்தூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பின்னர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைத்தனர். இதில் இடத்தின் உரிமையாளர் தேவராஜ், விஜயலட்சுமி வீட்டில் உள்ள டிவி மின்குளிர்சாதன பெட்டி உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும் அவர் வீட்டில் பீரோவில் இருந்த பணம் ரூபாய் 60 ஆயிரம் துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இத்தீவிபத்தில் பஞ்சு மெத்தை கடையின் உள்ளே இருந்த மிஷின், பஞ்சு மெத்தை போன்ற எரிந்து போன பொருட்கள் மதிப்பு 3 லட்சம் என கூறப்படுகிறது.
இதன்பின் புழல் சரக காவல் உதவி கமிஷனர் ஆதிமூலம் , மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு மாதவரம் தாசில்தார் நித்யானந்தம் வருவாய் அலுவலர் கரோலின் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீடு இழந்து தவித்த தேவராஜ் விஜயலட்சுமி தம்பதியினருக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் உணவு, உடை, அரிசி, ரூபாய் 5000 பணம் ஆகியவைகளை உதவித்தொகையாக அளித்தனர். இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment