பூலாம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள விசைப்படகு துறை பகுதியில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அவர், தான் சங்ககிரி பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும், ஆற்றின் மறு கரையில் உள்ள நெருஞ்சிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் இரவு 8 மணியானபோது அங்கிருந்த விசைப்படகு ஓட்டுநரை அணுகிய அந்த மூதாட்டி, தான் மறுகரைக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விசைப்படகு ஓட்டுநர், மீண்டும் காலையில் தான் இனி விசைப்படகு போக்குவரத்து நடைபெறும் எனவும், இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி விசைப்படகு போக்குவரத்து நடைபெறாது என கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட மூதாட்டி தொடர்ந்து அப்பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூலாம்பட்டி படகு துறை பகுதியில் அந்த மூதாட்டி காவிரி ஆற்றில் சடலமாக மிதந்ததை கண்ட அப்பகுதி மக்கள், பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தான் சங்ககிரி பகுதியிலிருந்து வந்ததாக கூறியதை அடுத்து போலீசார் சங்ககிரி சுற்றுவட்டார பகுதியில் சம்பந்தப்பட்ட பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: லிங்கானந்த்

Comments
Post a Comment