எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீருடன் கழிவுநீர்களும் சேர்ந்து சூழ்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது, சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்று கவுண்டம்பட்டி 29-வது வார்டு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த கிராம மக்கள் குடியிருப்பு பகுதி சூழ்ந்த மழை நீரை அகற்றக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரியிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிராம சபை கூட்டம் சுமார் ஒரு மணி நேர கால தாமதிற்கு பின் நடைபெற்றது. அப்போது கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த தண்ணீரை என்னும் ஒரு சில தினங்களில் முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
செய்தியாளர்: லிங்கானந்த்

Comments
Post a Comment