Skip to main content

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் அரிய வகை 'மலபார் அணில்' எண்ணிக்கை அதிகரிப்பு..!


கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரிய வகை விலங்கினங்களும், பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. மலபார் அணில்கள் எனப்படும் பறவை அணில் கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. ஆனால் தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளான வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிகளவில் காணப்படுகிறது.



இவை சோலை மரங்க‌ளில் இருந்து கொட்டாம்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால் அத‌ன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதி உருவாக்குவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து. மேலும் இந்த வகை அணில்கள் மரங்களில் மட்டும் வாழக்கூடியவையாகும். மலைச்சாலை ஓரங்களில் வனப்பகுதியில் உள்ள மரங்களில் முகாமிடும் மலபார் அணில்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வ‌முட‌ன் பார்த்து ர‌சித்து செல்கின்றனர். ஆனால் சிலர் அரிய‌ வ‌கை மலபார் அணில்களை அச்சுறுத்தி வ‌ருவ‌துட‌ன் வேட்டையாட‌ முயற்சிக்கின்றனர். 

எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து அரிய‌ வ‌கை மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது புலிச்சோலை பகுதியில் அதிக அளவில் தென்படும் மலபார் அணில்களை பாதுகாக்க இந்த பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தவும், ம‌ல‌பார் அணில்க‌ளை பாதுகாக்க ம‌லைச்சாலைக‌ளில் ம‌ல‌பார் அணில்க‌ளின் புகைப்ப‌ட‌த்துட‌ன் கூடிய‌ விழிப்புண‌ர்வு ப‌தாகைக‌ள் வைக்க‌ வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments