கொளத்தூர், ராஜமங்கலம் மற்றும் மாதவரம் பகுதிகளில் செல்போன் , இருசக்கர வாகனம் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதாக அடிக்கடி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி , கொளத்தூர் உதவி கமிஷனர் சிவக்குமார் ஆலோசனையில் ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொளத்தூர் ரெட்டேரி 200 அடி சாலையில் தனியார் பள்ளியின் அருகில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் , அவர் கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த அப்பு என்ற இளவழகன் (வயது 33) என்பவர் என தெரிந்தது. பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இவர் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டி பிழைப்பதாகவும் இரவில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத்தை திருடியும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபடுபவர் என தெரியவந்தது .
இதுகுறித்து ராஜமங்களம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் , குற்றவாளி இளவழகன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்த ஒரு இருசக்கர வாகனத்தையும், ஐந்தரை சவரன் நகையையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் இளவழகன் மீது மாதவரம் கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment