திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பரமசிவன் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மருத்துவ குணம் கொண்ட நெல்லி, இலுப்பை, மருதமரம், புளியமரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். மேலும் அபூர்வ வகையான வாகை மரம், வில்வமரம், புங்கைமரம் உட்பட சுமார் 200 வகை மரங்களையும் கடந்த பத்தாண்டுகளாக இவர் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கும் கிராம மக்களுக்கும் ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை தொடர்ந்து பரமசிவன் கடந்த நான்காண்டுகளாக பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
பூச்சிக்கொல்லி மருந்து எதையும் கலக்காமல் இயற்கை முறை விவசாயத்தில் கத்தரி, வெண்டை, பாகற்காய், சிகப்பு முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் சிகப்பு தண்டுக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட சத்துமிகுந்த கீரை வகைகளும் இவரது தோட்டத்தை அலங்கரிக்கின்றது.இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை கண்டு மனம் கலங்கிய இவர் இளம் தலைமுறையினர் இயற்கை விவசாயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துகிறார்.
இங்கு விளையும் காய்கறிகள் தினந்தோறும் அருகில் உள்ள சத்துணவு கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவாகிறது. மீதமுள்ள காய்கறிகளை தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தனுப்புகிறார். வருடம் முழுவதும் இது நடந்து வருகிறதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் தாங்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் எந்தவிதத்தில் விளைகிறதோ என தெரியாமலேயே வேறுவழியில்லாமல் உணவுக்கு பயன்படுத்துவதாகவும், ஆனால் இந்த பள்ளியில் இயற்கையான முறையில் பயிராகும் காய்கறிகள் எங்கள் பிள்ளைகள் மூலம் கொண்டு வரப்பட்டு அதை சமைத்து உணவருந்தும்போது மிகுந்த சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக மகிழ்ச்சியையும் தலைமை ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பாடத்தையும் தலைமை ஆசிரியர் ஆர்வமுடன் கற்றுக்கொடுப்பதையும் பெருமையுடன் கூறுகின்றனர். காய்கறிகள் மட்டுமல்லாமல் மாதுளை, கொய்யா, நாட்டு வாழை, மலை வாழை, கற்பூர வாழை, பப்பாளி, நாவல் உள்ளிட்ட பழவகைகளை வளர்த்து வரும் தலைமை ஆசிரியர் பரமசிவன் அவை அனைத்தையும் மாணவர்களுக்கே கொடுத்து மனநிறைவு கொள்கிறார்.மேலும் இங்கு வளரும் செம்பருத்தி, சூரியகாந்தி, நித்திய கல்யாணி, நந்தியா வட்டை உள்ளிட்ட பூவகைகள் கொண்ட பூந்தோட்டம் காண்பதற்கு மிகவும் ரம்மியமாக மனதை கொள்ளும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.மொத்தத்தில் இந்த அரசுப் பள்ளி காய், கனி, பூ என அனைத்தும் நிரம்பிய மினி பிருந்தாவனமாகவே காட்சியளிக்கிறது.
ஏதோ பள்ளிக்கு வந்தோமா பாடம் நடத்தினோமா வீட்டுக்கு சென்றோமா என சராசரி ஆசிரியராக இல்லாமல் தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் முடிந்த சேவையை சலிப்பில்லாமல் செய்து வரும் தலைமை ஆசிரியர் பரமசிவன் செயல் கிராம மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment