திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த 48 நாட்கள் மண்டல பூஜையின் நிறைவு நாளான இன்று ஆலய வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ராசாத்தி செல்வசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகர், மு.ஒன்றிய கவுன்சிலர் பகலவன், மோகனசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்


Comments
Post a Comment