திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டி சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (60) இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும், சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை தெற்கு மேட்டுப்பட்டியில் இரண்டு பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர், இரவு சுமார் 7 மணி அளவில், சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு, சின்னத்துரை சம்பவ இடத்திலே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பத்தின் போது அவரை தடுக்க சென்று அவரது மனைவி கலையரசியை தாக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவல் இருந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு, அது சிறிது தூரம் ஓடிச் சென்று, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பேரில், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என, அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சின்னத்துரையின் மகன் கனகராஜ் (36) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெரியப்பா வெள்ளைச்சாமி (63) என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜாமினில் வெளியே வந்த சின்னத்துரை மகன் கனகராஜ் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட போலீஸ் விசாரணையில், கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. செம்பட்டி அருகே நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment