திண்டுக்கல்லில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..! கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்..!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடினர். கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும்,தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை விஜயசாந்தி கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து விஜயசாந்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவா என்ற பழனிச்சாமி(31) என்பவர் சேனன்கோட்டையில் தங்கி வேடசந்தூரில் கொலை செய்யப்பட்ட நவீன்குமாருடன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் அடிக்கடி நவீன்குமார் வீட்டுக்கு வந்தபோது விஜயசாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதுகுறித்து நவீன்குமாருக்கு தெரிய வரவே அவர் கண்டித்துள்ளார். எனவே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவரை தீர்த்துக்கட்ட விஜயசாந்தி முடிவு செய்தார். இதனை தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். அதன்படி நேற்றிரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த நவீன்குமாரை மதுகுடிக்கலாம் என்று சிவா அழைத்துள்ளார். நன்றாக மதுகுடித்த நவீன்குமாரை கீழே தள்ளி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து விஜயசாந்தியிடம், உனது கணவரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். அதற்கு விஜயசாந்தி நான் நம்பமாட்டேன், வீடியோ காலில் பேசு என கூறியுள்ளார். அப்போது பிணத்தின் அருகில் நின்று கழுத்தை அறுப்பது போன்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன்குமாரை காட்டியபோதுதான் விஜயசாந்தி நம்பியுள்ளார். இதனைதொடர்ந்து யாருக்கும் தெரியாதது போல வீட்டிலேயே தூங்கிவிட்டார்.
கொலை செய்த சிவா ஒட்டன்சத்திரத்தில் தங்கியிருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் விஜயசாந்தியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு விஜயசாந்தி வந்தபோது எந்தவித பதட்டமும் இல்லாமல் அழுவது போன்று ஆக்டிங் செய்தார். அப்போது முதலே போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் உறுதியானது. இதனைதொடர்ந்து அவரது செல்போனை கேட்டபோதுதான் தான் ஏற்கனவே கள்ளக்காதலனுடன் எடுத்த புகைப்படங்களை அழிக்காமல் விட்டுவிட்டோமே என நினைத்துள்ளார். போலீசார் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் விஜயசாந்தியின் கள்ளக்காதல் உறுதியானது. பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருந்த சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர்: அரியநாயகம்


Comments
Post a Comment